Friday, September 21, 2012

முக்தி தரும் பதிகள்!

* பிறக்க முக்தி -  திருவாரூர்

*இறக்க முக்தி - காசி
 

*நினைக்க முக்தி - திருவண்ணாமலை

*தரிசிக்க முக்தி - சிதம்பரம்

*தீர்த்தமடை முக்தி -  வேதாரண்யம்

*கூற முக்தி - ஆலவாய் (மதுரை)

*கேட்க முக்தி - அவிநாசி

"பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்"

*மிளகில் உள்ள வேதிப் பொருள்கள் நம்மை நோயிலிருந்து காக்கும். உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.

*மிளகு வீக்கத்தைக் குறைக்கும்; வாதத்தை அடக்கும்.

*பசியைத் தூண்டும்; சூட்டைக் குறைக்கும்.

*பொட்டாசியம், கால்சியம், ஸிங்க், இரும்புச்சத்து, வைட்டமின் உள்ளிட்ட சத்துகள் உள்ளன.

*உமிழ்நீரை அதிகம் சுரக்கச் செய்கிறது; இதனால் ஜீரணத்தன்மை அதிகரிக்கும்.

*உலகிலேயே தலைசிறந்த மாற்று மருந்து மிளகுதான்.

*தென்னிந்தியாவில் கேரளா, மைசூர், கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும் மிளகு பயிரிடப்படுகிறது.

*நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் உள்ளது.

நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டுவிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சாப்பிடுவார்கள். வெளியில் தயாரிக்கப்படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் மிளகு முறிந்துவிடும்.

எனவேதான் "பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்' என்ற பழமொழி பயன்படுத்தப்படுகிறது.

Thanks to DINAMANI Tamil daily for this article!

வெளியுலகப் பயிற்சி அளித்த "யாத்ரா'
First Published : 16 Sep 2012 12:00:00 AM IST
பள்ளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா செல்வது எல்லோரும் அறிந்ததே. திரும்பி வந்த பிறகு அது குறித்த கட்டுரை எழுதித் தர வேண்டும் என்ற அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். ஆனால், இப்படியோர் அனுபவம் எத்தனைப் பேருக்கு கிடைத்திருக்கும்?
திருச்சி சமயபுரத்திலுள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 30 பேர் தில்லி சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் பதம்வீர் சிங், துணை இயக்குநர், இணை இயக்குநர் ஆஷிஷ் வச்சானி, விஞ்ஞான் பிரசார் மையத்தில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேசுவரன் உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடிவிட்டு வந்திருக்கிறார்கள்.
பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டிலிருந்து சென்று சந்தித்து உரையாடிய முதல் மாணவர் குழு இதுதான்.
பயணத்தின் பெயர் "யாத்ரா 2012'. "இது வெறுமனே சுற்றுலா அல்ல; வெளி உலகப் பயிற்சி' என்கிறார் பள்ளியின் முதல்வர் க. துளசிதாசன்.
அவர் மேலும் கூறியது: "இந்தப் பயிற்சிக்கென வகுப்புகள் தொடங்கிய நாளில் இருந்தே மாணவர்களைத் தேர்வு செய்யும் பணியைத் தொடங்கி விடுகிறோம். மொத்தமுள்ள பிளஸ் 1 மாணவர்கள் 1300 பேருக்கும் இரு நாள் ஆளுமைத் திறன் வளர்ப்புப் பயிற்சி.
தேர்வு மூலம் அதிலிருந்து 200 பேர் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் தொடர்ச்சியான பயிற்சிகள். சமூகம், அரசியல், மத- சாதிச் சிக்கல்கள், ஆட்சி, அதிகாரம், பொறுப்புகள், கடமைகள் குறித்த அத்தனை கோணங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
முடிவில் அதிலிருந்து 15 மாணவர்கள், 15 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களே "யாத்ரா'வில் பங்கேற்கிறார்கள். மாணவ, மாணவிகளுக்கான உடை, உணவு, தங்குமிடம், ஆளுமைகளைச் சந்திக்கும் ஏற்பாடுகள், அதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் பள்ளியின் செலவு. விமான டிக்கெட்டுகளை மட்டும் பெற்றோர்கள் ஏற்கிறார்கள்' என்றார் துளசிதாசன்.
யாத்ரா சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் சிலருடன் பேசினோம்.
மாணவி ஏ. அஷ்மிதா: பள்ளிக்கூடம் என்ற வட்டத்துக்குள்ளேயே இருந்த நாங்கள், அதை விட்டு வெளியே வந்து கற்கத் தொடங்கியிருக்கிறோம். பயணத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன், "நல்ல மனிதர்களாக இருக்க வேண்டும்' என்று சொல்லித்தான் தொடங்கி வைத்தார். பேருந்தில் சென்னை பயணம். அங்கிருந்து விமானத்தில் தில்லி.
சென்னை செல்லும் வழியில் கட்டிச் சென்ற சாப்பாட்டுடன் பேருந்து விழுப்புரம் அருகே கிராமத்தில் ஒதுங்கியது. வயல்வெளியில் மதிய உணவு. அதிகமாக இருந்த உணவுகளை வீணாக்காமல் அங்கே வேலை பார்த்த விவசாயிகளுக்குப் பகிர்ந்து வழங்கினோம். சென்னையில் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை சந்தித்தோம். "இந்தியாவில் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே வாழ்ந்தாலும் இந்தியா நல்ல நாடுதான்' என்றார் அவர்.
தில்லியில் நகர்ப்புறம் ஒரு மாதிரியாகவும், புறநகரம் ஒரு மாதிரியாகவும் இருந்தது எங்களை கவலைக்குள்ளாக்கியிருக்கிறது. பிரம்மாண்ட கட்டடங்களை அடுத்து கூரைகளைக் கொண்ட சேரிகளும் இருக்கின்றன.
யாத்ராவில் நாங்கள் கண்ட ஒவ்வொரு நிமிஷங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
மாணவி சாரா ஷாஹீன்: "குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு பிரணாப் முகர்ஜியை சந்திக்கும் முதல் தமிழ்நாட்டு மாணவர் குழு என்பதை அறிந்தபோது மிகவும் ஆனந்தமாக இருந்தது. நேரம் எத்தனை முக்கியமானது என்பது ராஷ்டிரபதி பவனில் உணர்ந்தோம்.
உங்களது பள்ளிப் பருவம் குறித்து கூறுங்கள் என்றபோது புன்முறுவலுடன் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்தார் பிரணாப் முகர்ஜி.
மாசடைந்துள்ள கங்கை நதியைப் பார்த்தோம். குப்பைகளும், சேரிகளும் நிறைந்த தலைநகர் தில்லியைப் பார்த்தோம்.
ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநர் பதம்வீர்சிங் எங்களுடன்பேசும்போது, "யாராவது சொல்வதால் மட்டுமே ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டாம். நீங்களாக முடிவெடுங்கள். அதுதான் முக்கியம்' என்று அறிவுறுத்தினார்.
17 வயதில் இப்படியொரு அனுபவம் எங்களுக்கு கிடைத்தது குறித்து எண்ணிப்பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. மறக்க முடியாத அனுபவம்'.
மாணவன் வி. கெüதம்: "நாடாளுமன்றத்துக்குள் நுழைய 3 மணி நேரம் பிடித்தது. திருச்சி சிவா எம்பி எங்களை ஒவ்வோர் இடத்துக்கும் அழைத்துச் சென்று காட்டினார். எம்பிக்கள் மட்டுமே அமர்ந்து உணவருந்தும் இடத்தில் எங்களையும் அமர வைத்து சாப்பிட வைத்தார். நாடாளுமன்ற வளாகத்தில் லாலு பிரசாத் யாதவை அழைத்து வந்து எங்களை அறிமுகப்படுத்தினார். "வாங்க, போங்க, போடு, மணக்கம் (வணக்கம்!)' எனத் தமிழில் சில சொற்களைச் சொல்லிவிட்டுப் போய்விட்டார் லாலு பிரசாத்.
 விமானப் பயணமே ஓர் அனுபவம்தான். போகும்போது எதுவும் தெரியவில்லை. வரும்போது, குறிப்பாக இறங்கும்போது ஒரு குலுங்கு குலுங்கியபோது மனம் படபடவென அடித்துக் கொண்டது.
மாணவன் கே. கதிர் கிஷன்: ஐஏஎஸ் அகாதெமியில் உள்ள நூலகத்தை வாழ்நாள் முழுவதும் இருந்து படித்தாலும் படித்து முடிக்க முடியாது. அத்தனைப் பெரியது. அங்கு பதம்வீர்சிங், ஆஷிஷ் வச்சானி போன்றோரைச் சந்தித்துவிட்டு வெளியே வரும்போது மழை பிடித்துவிட்டது.
அதன்பிறகு, மாலை 4 மணிக்குத்தான் ராணுவப் பயிற்சி அகாதெமிக்குச் சென்றோம். எங்களுக்கு பிற்பகல் 2 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. நேரத்துக்குச் செல்லாததால் எங்களை அனுமதிக்கவில்லை. சற்று உள்ளே பார்த்துவிட்டுத் திரும்பவும் அனுமதிக்கவில்லை. நேரத்தில் அத்தனை கறார்.
விஞ்ஞான் பிரசார் பவனில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேசுவரனைச் சந்தித்தோம். "சூப்பர் கம்ப்யூட்டரை' எங்களுக்குக் காட்டி விளக்கினார் அவர். இவையெல்லாம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றபோது, ஏன் நாமே தயாரிக்கக் கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.
புதிய புதிய கோணங்களில் அறிவியல் நிகழ்வுகளை, செயல்பாடுகளை விளக்கினார் வெங்கடேசுவரன்.
மாணவர்களுடன் யாத்ரா பயணத்தை ஒருங்கிணைத்துச் சென்ற எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் கூறியது:
""இந்திராகாந்தி சுடப்பட்ட சப்தர்ஜங் இல்லத்துக்கும், காந்தியடிகள் சுடப்பட்ட பிர்லா வீட்டுக்கும் போனோம். மனம் கனத்தது. பயணத்துக்கு முன்பு வரை 58 வயதுக்காரனாக இருந்த எனக்கு திரும்பிய பிறகு 40 வயதுக்காரனாக மாறிவிட்டேன். இளம் மனங்களின் போக்கை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இப்பயணம் அமைந்தது.
நாட்டின் மிக உயர்ந்த நிறுவனங்களும், அவற்றை ஆளும் மிகப்பெரிய ஆளுமைகளும் தொட்டுவிடும் தூரத்தில் மாணவர்களுக்குப் பக்கத்தில் வந்து நின்ற அரிய வாய்ப்பு உண்மையில் அரிதானதுதான். சில அதிர்வலைகளை அவர்களுக்குள் ஏற்படுத்தியிருக்கும். அது தொடர்ந்து வேலை செய்யும்'' என்றார் தமிழ்ச்செல்வன்.
மாணவர்களுடன் இந்தப் பயணத்தில் சென்று திரும்பிய பள்ளியின் இணைச் செயலர் டாக்டர் ப. சத்தியமூர்த்தி கூறியது:
"இரண்டாம் ஆண்டாக இந்தப் பயணம் செல்கிறோம். இரண்டு ஆண்டுகளும் நானும் சென்று வந்திருக்கிறேன். மாணவர்களுக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்றோருக்கே இந்தப் பயணம் நிறைய சொல்லித் தந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மாணவர்களில் 30 பேரை மட்டுமே அழைத்துச் செல்ல முடிகிறது என்ற வருத்தம் மட்டுமே மேலிடுகிறது' என்றார் சத்தியமூர்த்தி.
வெறுமனே கல்விச் சுற்றுலா என்ற பெயரில் பொழுதுகளையும், பணத்தையும் வீணாக்குபவர்கள், இவர்களிடம் கொஞ்சம் தொழில்நுட்ப ஆலோசனை(!) பெற்றுச் செல்வது நல்லதென்றே தெரிகிறது.
சா.ஜெயப்பிரகாஷ் DINAMANI

Wednesday, September 12, 2012

மனஅழுத்தம் ஏற்படுதா கவலைபடாதீங்க... ஈஸியா விரட்டலாம்...


இன்றைய காலத்தில் அதிக மக்கள் மனஅழுத்தத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மன அழுத்தம் வேறு எங்கு இருந்தும் வருவதில்லை, நாம் செய்யும் செயல்களைப் பொறுத்தே மனஅழுத்தம், உளைச்சல் போன்றவை ஏற்படுகிறது. அதிலும் தற்போது அதிக வேலைப்பளு பலருக்கு உள்ளது. இதன் காரணமாகவும் மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படுகிறது. அதிலும் பெண்களே அதிக அளவில் இந்த பிரச்சனைக்கு ஆளாகின்றனர். ஆகவே அத்தகைய மன அழுத்தத்தை குறைக்க, சரிசெய்ய என்ன செய்ய வேண்டுமென்று உளவியல் நிபுணடர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
மனஅழுத்தத்தை விரட்டும் வழிகள்:
* எப்போதும் சந்தோஷமாக, சிரித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு மனஅழுத்தம், மன உளைச்சல் மற்றும் மன இறுக்கம் போன்றவை ஏற்படாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல், சிரித்துக் கொண்டு ரிலாக்ஸ் ஆக இருந்தால், மன அழுத்தம் வருவதைத் தடுக்கலாம்.
* வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு மற்றும உடலுக்கு நன்கு எண்ணெய் வைத்து, மசாஜ் செய்து குளிக்க வேண்டும். அதிலும் வீட்டில் பூஜைக்கு அல்லது தலைக்கு வைக்க பூக்களை வாங்குவீர்கள். அதில் சிறிது பூக்களை கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி வைத்துவிட்டு, பின்னர் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், அதன் நறுமணத்திற்கு மன அழுத்தம் குறைந்து, மனதும் சற்று ரிலாக்ஸ் ஆகும்.
* மன அழுத்தம் ஏற்பட மற்றொரு காரணம், தன் மனதில் இருக்கும் பிரச்சனை மற்றும் கஷ்டத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதது ஆகும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனையை உங்கள் உயிர் தோழனிடம் மனம் விட்டு பேசிப்பாருங்கள், அப்போது உங்களுக்கே மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைத்துப் போல் இருக்கும். மனம் குதூகலத்துடன் காணப்படும்.
* மனம் கஷ்டமாக இருக்கும் போது, பிராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சியை செய்தால், மன இறுக்கம் குறையும். இல்லையென்றால் கடினமான உடற்பயிற்சி அல்லது வேகமாக நடப்பது போன்றவற்றையும் செய்யலாம். அதனால் உடலுக்கு மட்டும் ஆரோக்கியமானதல்ல, மனதிற்கும் தான்.
* சிகரெட், மதுபானம் போன்றவையும் மனஅழுத்ததிற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே அதனை குறைப்பது நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் பொருள் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஹார்மோன்களோடு தொடர்புடையது.
* எதைப் பற்றியும் எப்போதும் யோசித்துக் கொண்டிருக்க வேண்டாம். அதிலும் முக்கியமாக நாளை என்ன நடக்கும் என்பதைப் பற்றி நினைத்து கவலைப்படக்கூடாது. இவ்வாறு யோசித்தால், இரவில் நிம்மதியான தூக்கம் ஏற்படாமல், உடலும் மனமும் பாதிக்கப்படும். ஆகவே எப்போதும் ரிலாக்ஸ் ஆக இருக்க வேண்டும். வேலை இல்லாத நேரத்தில் மனதிற்கு அமைதியைத் தரும் பாடல்கள் அல்லது பிடித்த பாடல்களை கேட்டலாம். இவற்றாலும் மனஇறுக்கம் குறையும்.

கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!


பொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.
இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.
இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

மனநோய்க்கு மருந்தாகும் சீரக கசாயம்!


சீரகத்தைப் பிரித்தாலே சீர் + அகம் என்ற வார்த்தைகள் கிடைக்கும். நம் உடலின் அனைத்து பாகங்களையும் சீராக்கி நோயின்றி வாழ வகுக்கிறது சீரகம். இதன் மருத்துவ குணத்திற்காகவே இந்திய சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படுத்தப்படுகிறது.
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.
சீரகத்தில் உயர்தர இரும்புச் சத்து உள்ளது. இது ரத்த சிகப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் ஆக்சிஜனை உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கடத்த உதவுகிறது. உடலுக்கு சக்தி கிடைக்கிறது.
வயிறு மந்தத்தைப் போக்கும்
உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.
ரத்த அழுத்தம் கட்டுப்படும்
அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
மார்பு வலி நீங்க
மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.
சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு
மனநோய் குணமாகும்
சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் குணமடையும்
அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.
கர்ப்பிணிகளுக்கு கசாயம்
சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு கஷாயம் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுத்து உடல் லேசாகும், வர பிரசவம் எளிதாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் மிளகு!


சளியோ இருமலோ வீட்டில் மிளகு இருந்தால் போதும் நோயை போக்கிவிடலாம் என்பார்கள். பாட்டி வைத்தியத்தில் மிளகுக்கு மிகப்பெரிய பங்குண்டு. நறுமணப்பொருளான மிளகு இயற்கை வைத்தியத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நம்வீட்டில் சமைக்கப்படும் அனைத்துப் பொருட்களிலும் ஒரு சிட்டிகை மிளகு சேர்த்துக்கொண்டால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைக்கு நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் ரசாயன உரங்கள் சேர்க்கப்படுகின்றன. நாகரீகம் என்ற பெயரில் நஞ்சை உண்கிறோம் என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிவார். அதைப்போல எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை உணவுகளை உட்கொள்கிறோமோ அந்த அளவிற்கு நோய்களும் நம்மை எளிதில் தாக்குகின்றன. இந்த நோய்களை நீக்கும் மருந்துகள் நம்வீட்டு அஞ்சறைப்பெட்டியிலேயே வைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
நம் வீட்டில் உள்ள மிளகில் மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்சத்து ஆகியவை அடங்கியுள்ளது. கருப்பு மிளகு நோய் அலர்ஜி, எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் மிகச்சிறந்தது. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது.
இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது.
தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது. வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவைகளை நீக்குகிறது.
மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மேலும் இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.
மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது. நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது... புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்தலாம்.

உடலின் ஒட்டு மொத்த நலனிற்கும் மிளகு நல்லது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.